01. தமிழின் இனிமை!
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
– பாரதிதாசன்
சொல்பொருள்
கனி – பழம்
கழை – கரும்பு
நனி – மிகுதி
நல்கிய- வழங்கிய
பாடல் பொருள்
கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும்விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.
நூல் குறிப்பு
இப்பாடலைப் பாடியவர் பாரதிதாசன். புதுச்சேரியில் பிறந்த இவர், பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார். இவர் பாடிய இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
மதிப்பீடு
அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.
Question 1.
‘கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ………………..
அ) கரும்பு
ஆ) கறும்பு
இ) கருப்பு
ஈ) கறுப்பு
Answer:
அ) கரும்பு
Question 2.
கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) கனி + யிடை
ஆ) கணி + யிடை
இ) கனி + இடை
ஈ) கணி + இடை
Answer:
இ) கனி + இடை
Question 3.
பனி + மலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பனிம்மலர்
ஆ) பனிமலர்
இ) பன்ம லர்
ஈ) பணிமலர்
Answer:
ஆ) பனிமலர்
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) கழையிடை – ………………….. + ……………………
ஆ) என்னுயிர் – ………………….. + ……………………
Answer:
அ) கழையிடை – கழை + இடை
ஆ) என்னுயிர் – என் + உயிர்
இ. பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.
1. பால் – ……………….
2. சாறு – ……………….
3. இளநீர் – ……………….
4. பாகு – ……………….
Answer:
1. பால் – பசு
2. சாறு – கரும்பு
3. இளநீர் – தென்னை
4. பாகு – வெல்லம்
ஈ. இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, கழையிடை
பாகிடை, பாலும்
தேனும், நீரும், சுவையும்
உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, பனிமலர்
நனிபசு, இனியன, எனினும்
தென்னை , என்னுயிர், என்பேன்
ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனிச்சுவை, கழைச்சாறு, பனிமலர், தேன், பாகு, நனிபசு, பால், தென்னை , குளிரிளநீர்.
எ. வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
Answer:
- பலாச்சுளை
- கரும்புச்சாறு
- தேன்
- பாகு
- பசுவின் பால்
- இளநீர்
Question 2.
பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
Answer:
பாரதிதாசன் தமிழே என் உயிர் என்கிறார்.
02. அறிவா? பண்பா? பட்டிமன்றம்
கவிதைப் பட்டிமன்றத்துக்கான அறிமுகம் பேசுதல் என்பது அடிப்படைத்திறன் எனில், பேச்சாற்றல் என்பது உயர்நிலைத் திறன். பேசுதலின் வளர்நிலையேபேச்சாற்றல். அத்தகைய பேச்சாற்றல் திறனை வளர்க்கும் பாடங்களுள் ஒன்று, இக்கவிதைப் பட்டிமன்றம்.
பலர் நிறைந்த அவையினிலே தாம் இயற்றிய கவிதையை வெளியிட்டபோது, பாரதியாருக்கு 11 வயதுதான். ஆதலால், கவி பாடும் திறமையை இளமையிலேயே வளர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது. இங்கு உரைநடைப் பாடமாக அமைந்துள்ள இப்பகுதி, இலக்கியத்தின் ஒரு வடிவமான கவிதை நடையில் அமைந்துள்ளமை, புதுமையின் நுழைவாயில். கவிதைக்குரிய சொல்லாடல், உவமைச்சிறப்பு, மோனை, எதுகை போன்ற நயங்கள் மேலும் பாடப்பகுதியைச் சிறப்புடையதாக்குகின்றன. மாணவர்கள், குரல் ஏற்றஇறக்கத்தோடும் தங்குதடையின்றியும் வாய்விட்டுப் படிக்கும்போதுதான் இக்கவிதைப் பட்டிமன்றப் பேச்சு, ஆற்றல் வாய்ந்த பேச்சுக்கலையாக மிளிரும். அதற்கான வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.
இடம் : பள்ளிவளாகம்
காலம் : பிற்பகல் 3. 00 மணி
உறுப்பினர்கள் : நடுவராகச் சிறப்பு விருந்தினர், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்சுவை, அருளப்பன், மதியொளி, சலீமா.
அறிவா? பண்பா?
நடுவர் : செந்தமிழே ! நறுந்தேனே ! செகம் போற்றும் செம்மொழியே ! முத்தமிழ் சொல்லெடுத்து நற்றமிழ்ப் பட்டி மண்டபத்தின் நடுவராக நான் வந்துள்ளேன். வணக்கம். தித்திக்கும் தேன்தமிழில் எத்திக்கும் புகழ்பரப்பும் வித்தகக் கவிதையால், பெரிதும் தேவை அறிவா? பண்பா? என, பா பாட வருகின்றனர் பாராட்டுக்குரிய நால்வர், தனித்துவமிக்க இன்சுவை,சொல்லழகி சலீமா அருமையான அருளப்பன், ஒப்பற்ற மதியொளி….. முதல் கவிதை முத்தாய்ப் பாட இனிதே அழைக்கின்றேன் இன்சுவையை……
இன்சுவை : புவி காக்கும் தமிழ்த் தாய்க்கும் கவியரங்கத் தலைமைக்கும் ஆன்றோருக்கும் சான்றோருக்கும் அறிவுதான் முன்னேற்றத்தின் ஆணிவேர் என்றே அடித்துக் கூற வந்துள்ளேன் ‘அக்னி’ தந்த அப்துல்கலாம் அசத்தியதும் அறிவாலே! அறிவாலே! அறிவின் துணை கொண்டே ஆயிரம் கண்டுபிடிப்பால் தாமஸ் ஆல்வா எடிசனும் வாழ்கின்றார் அறிவாலே! அறிவுமிகு மனிதனாக அகிலத்தில் உயர்ந்து நின்றால் அத்தனையும் நம் கையில் என்று கூறி விடை பெறுகின்றேன்……..
நடுவர் : இன்சுவையின் கவிதை அறிவாயுதம்……. அடுத்து, ஒளிரும் கவிதையுடன் மதியொளி கவிபாட வருகின்றார்
மதியொளி : அகிலமெல்லாம் தமிழே மணக்கும்! பண்புதான் வெற்றிப்படி என்றே பறை சாற்ற வந்துள்ளேன். நற்பண்பு தூக்கிவிடும் நம்மை உயரத்திலே நற்பண்பு புகுந்து விட்டால்
நாவினிலே இனிமை வரும் பண்பாலே சிறந்தவர் தாம் பலருண்டு நம்மிடையே புத்தரோடு வள்ளுவரும் போதித்ததும் நற்பண்பே….. நன்னெறியால் நிலைத்து நிற்போம் உலகினிலே….
நடுவர் : மிளிர்கின்ற தமிழ்க் கவிதை மதியொளியின் அரும் கவிதை…. அறிவாற்றல் பயன் பேச அருளப்பன் வருகின்றார். செறிவாற்றல் கவிதையொன்றைச் செப்பிடவே வருகின்றார்.
அருளப்பன் : அறிவாற்றல் உள்ளவன்தான் ஆளுகின்றான் அண்டத்தை வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமோ? கூறும் பண்பில் நம் வயிறும் நிறைந்திடுமோ?
நல்லவன் இருந்தால் நாடென்ன முன்னேறுமோ? வல்லவன் வகுத்ததன்றோ வளமான இவ்வுலகு….. தூண் போன்ற அறிவேதான் வான் முகத்தைத் தொட்டிடுமே!…….
நடுவர் : பண்பின் பெருஞ்சிறப்பைப் பொழிந்திடவே வருகின்றார் சொல்லழகி சலீமா……
சலீமா : பண்பிலான் பெற்ற செல்வம் பயனில்லை உலகோர்க்கே, பண்பேதான் அன்பை நல்கும். பன்மடங்கு உயர்வைத் தரும் உண்மை சொன்னேன் யாவர்க்கும். அன்பின் மிகுதியால் அதியமான் உயிர் காக்கும் நெல்லிக்கனியை உவந்தளித்தான் ஔவைக்கு அத்தனையும் எளியோர்க்கு அன்னை தெரசா பெற்றுத் தந்தார் குணமென்னும் நற்பண்பே குன்றிலிட்ட விளக்கன்றோ……
நடுவர் : எல்லோரும் சிறப்பாக நல்லோரே போற்றும் வண்ணம் நற்கவிதை வாசித்தார்கள்……என்னுடைய தீர்ப்பிற்கு இசைந்தே தான் வருகின்றேன்….. கண்ணுக்கு இருவிழி. கல்வியின் நேர்விழி. அறிவும் பண்பும் சமமாக வைத்தேதான். உறு புகழ் பெறுவோமே…… பொறி ஐந்தும் பண்பாகப் பார் முழுவதும் அறிவாக வலம் வருவோம் நாமே உளம் நிறை வாழ்த்தோடு நலம் இரண்டும் தானென்று நல்ல தீர்ப்பு கூறி நானும் விடைபெறுகின்றேன்…..
நன்றி வணக்கம்!
03. என்ன சத்தம்…

அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால்செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.
ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. செழியன் ஒரு மரத்தடியில் அமர்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகளின் அலப்பும் அலப்பறை ஓசை அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று அமர்ந்தான். அங்கிருந்த மரங்களில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. அம்மரத்திலிருந்த குயில் ஒன்று குக்கூ குக்கூ ….. எனக் கூவியது. குயிலின் ஓசைசெழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது. அப்படியே படுத்துச் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். திடீரென ஆடுகள் மே…..மே……எனக் கத்தும் சத்தம் கேட்கவே, செழியன் பதற்றத்துடன் எழுந்து என்னவென்று கவனித்தான். அருகில் பச்சைப் புதரருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன, நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஒரு குச்சியை வளைத்து வில்லாக்கி நரியை நோக் கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.
செழியன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாட்டியுடன் வீட்டிற்குக் கிளம்பினான். தூரத்தில் எங்கோ சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது. பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொ ண்டு இங்குமங்கும் பறந்தன. யானை பிளிறியது; ஆந்தை அலறியது; கீரிப்பிள்ளையும் செடிகளின் மறைவிலிருந்து ஓடியது

மயில் அகவியது; பாம்பும் தன் புற்றிலிருந்து வெளியே வந்து சீறியது; குதிரை கனைத்தது. இவற்றை எல்லாம் கேட்ட செழியனுக்குப் பயத்தால் நாக்கு வறண்டது. தான் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தான்.
பாட்டியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் கம்பங்கொல்லையில் வண்டுகள் முரலும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. ஊருக்கு அருகே வந்த பிறகுதான் செழியனுக்குப் பயம் சற்றுக் குறைந்தது. செழியன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனைக் கண்ட மகிழ்ச்சியில் தொழுவத்திலிருந்த பசு கத்தியது. செழியன் ஆடுகளைப் ஆட்டுப்பட்டியில் விட்டுத் தன் அம்மாவிடம் சென்று, காட்டில் தான் கண்ட நரியைப் பற்றியும் சிங்கம், யானை இவற்றின் சத்தத்தைப் பற்றியும் மிகுந்த பரபரப்போடு கூறினான். அம்மா செழியனின் துணிவைப் பாராட்டினார்.

வாழைத் தோட்டத்திலிருந்த தண்ணீர்த் தொட்டியில் செழியன் குளித்துவிட்டு வந்தான். அம்மா கொடுத்த முறுக்கைத் தின்றான். அப்போது தங்கை பூவிழி பால் பருகிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, செழியனையையும் , பூவிழியையும், பாட்டியையும் சாப்பிட வாருங்கள் என்று அம்மா அழைத்தார். அம்மாவின் குரலைக் கேட்டதும் இருவரும் சென்று கொடுத்த உணவை உண்டனர்.
பின்னர், தூங்கப் போகும் முன் பாட்டி கதை கூறினார். இருவரும் கதையை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எலியும் எலிக் குஞ்சும் கீச் ….கீச் ….. என்று சத்தமிட்டன.
எலியின் இந்த சத்தம், பாட்டியின் கதைக்குப் பின்னணி சேர்ப்பதுபோல் இருந்தது.நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்தான். அங்கே பூனை ஒன்று சீறுவதைக் கண்டு நாய் குரைத்தகாரணம் அறிந்தான். இரண்டையும் அருகிலிருந்த தென்னந் தோப்பின் பக்கம் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். பாட்டியும், தங்கையும் முன்பே தூங்கிவிட்டனர்.
கொய்யாத் தோப்பிலிருந்த மரத்தின் மேலிருந்து கொக்கரக்கோ …… கொக்கரக்கோ ……என சேவல் ஒன்று கூவும் ஓசையைக் கேட்டுக் கண் விழித்தான் செழியன்.
கா…..கா…… எனக் காகமும் தன் பங்குக்குக் கரைந்தது.
செழியன் உற்சாகமாகத் துள்ளிெயழுந்து அன்றைய நாளின் கடமைகளை மகிழ்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தான். தன் அனுபவங்களைத் தன் நண்பர்களோடு பகிரப் போகும் ஆவலுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.
பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் ஒலிப்பு முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென முன்னோர் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகிறோம்.